திங்கள், 26 டிசம்பர், 2011

மயூர வாகன சேவனம்!







தினமணி : வெள்ளிமணி :23 Dec 2011 11:00:00 AM IST












பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் (1848-1929), முருகப்பெருமான் ஒருவனையே முழு முதற்கடவுளாக வழிபட்டவர். மக்கள், துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் அருளியவர். 

இவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சமய சாத்திரம், தோத்திரம் முதலியவைகளின் நுட்பங்களைக் கொண்டவை. இவருடைய பாடல்கள் மந்திரசக்தி வாய்ந்தவை மட்டுமல்ல, முருகப் பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவை.



மயூரவாகன சேவனம்:
 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம், சென்னையில் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்தார்.

 உருத்ரோத்காரி ஆண்டு, மார்கழி மாதம், 12-ஆம் நாள் வியாழக்கிழமையன்று (27.12.1923) வடசென்னை, தம்புச் செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி பாம்பன் சுவாமியின் மீது மோதியதால் அவரின் இடக்கால் எலும்பு முறிந்தது. 

அதைக்கண்டு சுவாமி கலங்கவில்லை; மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்துவிட்டன என்றும், மீண்டும் பிறவித் துன்பம் வராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடியையே சிந்தித்திருந்தார்.



இந்த விபத்தைக் கண்ட சுவாமியின் அன்பர் ஒருவர் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். பாம்பன் சுவாமி 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பில்லாத உணவையே உண்பவர் என்பதாலும் அவரின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினர்.



அவர்கள் கூறியதை ஏற்காமல் பாம்பன் சுவாமி, முருகப்பெருமானையே சிந்தித்த வண்ணமாய் இருந்தார். சீடர்கள், 1891-ஆம் ஆண்டில் சுவாமி இயற்றிய சண்முகக் கவசத்தை தினந்தோறும் பாராயணம் செய்தார்கள். 

மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரவில் முருகப்பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை விரித்து, அழகிய வானை மறைத்திருப்பதையும், மற்றொரு மயில் அதனுடன் சேர்ந்து நடனமாடிய காட்சியையும் கண்டார். அக்காட்சி மறைவதைக் கண்டு, முருகப்பெருமானின் திருவருளைச் சிந்தித்து அழுதார்.



அவர் மனம் மகிழுமாறு செவ்வேட் பரமன் ஓர் இரவில் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் சுவாமி படுத்திருந்த படுக்கையில் படுத்திருந்தான். குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று அறிந்துகொண்டதும் அக்குழந்தை மறைந்துவிட்டது.



பிறகு, மருத்துவர்கள் ஆராய்ந்து, எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி அந்த மருத்துவமனை கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பு வருமாறு:



""பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11வது வார்டு (மன்றோ வார்டு) 11வது படுக்கையில் 27.12.1923 அன்று சேர்க்கப்பட்டிருந்தார். முருகப்பெருமான் திருவருளால் 11-ஆம் நாள் இரவு (6.1.1924) வளர்பிறை பிரதம திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலேயே பூரண குணம் பெற்றார். அந்நாள் "மயூர வாகன சேவன' விழாவாக ஒவ்வோராண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது''.



அவ்வகையில்÷மகிமை பொருந்திய "மயூரவாகன சேவன விழா' 88-ஆம் ஆண்டு விழாவாக 25.12.11 மற்றும் 26.12.11 தேதிகளில் சிறப்பாக மஹாதேஜோ மண்டல சபையால் பாம்பன் சுவாமியின் சமாதி நிலையத்தில் நடத்தப்படுகிறது. 

ஆண்டவன் அருள்பெற்ற அடியார்களின் பூஜையே ஆண்டவனுக்கு உகந்த - சிறந்த பூஜையாகும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறியதுபோல மயூரவாகன சேவனம் ஒரு மகத்தான சேவனம்! தொடர்ந்து நிகழ்த்தினால் துன்பங்கள் தொலைந்தோடும்!